Asianet News TamilAsianet News Tamil

காஞ்சிபுரத்தில் 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்...

108 ambulance workers demonstration in Kanchipuram
108 ambulance workers demonstration in Kanchipuram
Author
First Published Mar 9, 2018, 10:26 AM IST


காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 108 அவசர ஊர்தி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் டி.பாலாஜி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரா.ராஜேந்திரன், பிரேம், குணசேகரன், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் டி.பிரகாஷ் கண்டன உரையாற்றி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். 

"தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 108 அவசர ஊர்தி சேவைத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், 4300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் சேவை நோக்கத்துடன் இரவு பகல் பராமல் சேவை செய்துவருகிறோம். 

விபத்து, பிரசவம் உள்ளிட்ட சேவைகளின்போது, நாங்கள் உடல் உபாதைகளையும், இயற்கை உபாதைகளையும் பொருள்படுத்தாமல் மக்களின் உயிரைக் காப்பதற்காக போராடி வருகிறோம். 

பொது நிறுவனங்களில் வேலை நேரம் என்பது 8மணி நேரம் தான். ஆனால் நாங்கள் 108 வாகனத்தை எடுக்கும்போது எப்போது பணி முடியும் என்பதைக் கூட பாராமல் சேவை நோக்கில் செயல்பட்டு வருகிறோம். 

ஆனால், 108 அவசர ஊர்தி சேவை திட்டத்தை ஒப்பந்த முறையில் நிர்வகித்து வரும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ நிறுவனம், கடந்த 2017-ஆம் ஆண்டு எங்களின் ஊதிய உயர்விற்காக தமிழக அரசு வழங்கிய பணத்தை முறையாகவும் முழுமையாகவும் வழங்கவில்லை. 

இதுகுறித்து தமிழக அரசிடம் 108 அவசர ஊர்தி தொழிலாளர் சங்கம் (பதிவுஎண்: 1508) எம்டியு சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஜிவிகே இம்ஆர்ஐ நிர்வாகம், 5-10-2017, 10-10-2017 ஆகிய தேதிகளில் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. 

அப்போது, தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஆகியவற்றிற்கு பணம் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்து முறையாக வழங்குகிறோம். மேலும், தேசிய மனித வளத்துறை அதிகாரி மூலம் சம்பளம் வழங்கும் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை. தொழிலாளர்களை அந்த நிர்வாகம் தொடர்ந்து ஏமாற்றிவருகிறது.  தமிழக அரசும், மத்திய அரசும் இந்த பிரச்னையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இதில் நியாயம் கிடைக்கும் வரை, மக்கள் ஆதரவோடு எங்களின் போராட்டங்கள் தொடரும் என்று இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஏ.வினோத் குமார் நன்றி கூறினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios