Asianet News TamilAsianet News Tamil

கடை கடையாக சென்று 100 ரூபாய் கள்ளநோட்டுக்கு சில்லறை வாங்கும் இளைஞர் சிக்கினார்; ரூ.4 இலட்சம் கள்ளநோட்டு பறிமுதல்…

100 rupees counterfeit notes are rocovered worth Rs. 4 lakh money
100 rupees counterfeit notes are rocovered worth Rs. 4 lakh money
Author
First Published Jun 13, 2017, 8:24 AM IST


தேனி

கடை கடையாக சென்று 100 ரூபாய் கள்ளநோட்டுக்கு சில்லறை வாங்கி ஏமாற்றிய இளைஞர் சிக்கினார். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4½ இலட்சம் மதிப்பிலான 100 ரூபாய் கள்ள நோட்டுகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ளது சிங்கராஜபுரம். இந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை 100 ரூபாய் நோட்டை கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளார். அதனை வாங்கிப் பார்த்த கடைகாரர், அந்த நோட்டு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கள்ளநோட்டாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தார்.

இதனையடுத்து கடைக்கு வந்தவனிடம் இதுகுறித்து விசாரிக்க முற்பட்டபோது அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து வருசநாடு காவலாளர்களுக்கு அந்தக் கடைக்காரர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் அவருடைய பெயர் ஜோதிபாசு (34) என்றும், வருசநாடு அருகே உள்ள அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி என்றும் தெரியவந்தது.

அவருடைய சட்டைப்பையில் 100 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதனை சோதனை செய்தபோது, அவை கள்ளநோட்டுகள் என்று தெரிந்தது.

சிங்கராஜபுரத்தில் உள்ள ஒரு கடையில் கள்ளநோட்டை கொடுத்து பொருட்கள் வாங்கியதும் இவர்தான் என்பதும், கடை கடையாக சென்று கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை வாங்கியதும் விசாரணையில் தெரிந்தது.

ஜோதிபாசுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று காவலாளர்கள் விசாரணை நடத்தியதில் வருசநாடு அருகே தனது உறவினர் ஒருவரின் வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

உடனே காவலாளர்கள் அந்த வீட்டில் சோதனை செய்ததில், வீட்டில் இருந்த ஒரு பையில் கத்தை, கத்தையாக 100 ரூபாய் கள்ளநோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அங்கிருந்து ரூ.4 இலட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக வழக்குப்பதிவு செய்து ஜோதிபாசுவை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்களான பாலமுருகன், சுரேஷ் ஆகிய இருவருக்கும் இதில் தொடர்பிருப்பதால் அவர்களையும் காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios