திருவாரூர் மாவட்டத்தில் குடியிருப்பு வாசிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வந்த விஷ பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் லாவகமாக பிடித்துச் சென்றனர்.

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட திருமஞ்சன வீதியில் வசித்து வந்தவர் கலியமூர்த்தி. இவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அந்த வீட்டில் அவரது மகள் மாலதி, பேத்தி, அவரது குழந்தைகள் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீட்டுக்கு அடிக்கடி நாகப்பாம்பு வந்து பயமுறுத்துவது தொடர் கதையாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

குறிப்பாக அருகிலுள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் புதர் மண்டி இருப்பதாலும், வீட்டிற்கு எதிரே உள்ள குளுந்தாளங்குளம் ஆகாயத்தாமரை படர்ந்து சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாலும் பாம்பு அடிக்கடி இந்த பகுதியில் வசிப்பவர்கள் வீட்டு தோட்டத்திற்குள் புகுந்து விடுவது வாடிக்கையான ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கலியமூர்த்தி வீட்டை சுற்றி உள்ள ஐந்து அடி சுற்றுச் சுவரில் ஏறி வேப்ப மரத்தின் வழியாக 8 அடி நீள கருநாகப் பாம்பு ஒன்று வந்துள்ளது. இது குறித்து திருவாரூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் பாம்பு அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நேற்றும் அதே போன்று 7 அடி நீள நாகப்பாம்பு ஒன்று வீட்டிற்க்கு வந்துள்ளது.அதை பார்த்து வீட்டில் வளர்க்கப்படும் நாய் குறைத்ததால் உடனடியாக அதை பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்புக் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து

உடனடியாக அந்த இடத்திற்கு வந்த திருவாரூர் தீயணைப்புத்துறையினர் சுற்றுச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற நாக பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் போட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.மேலும் இந்த பகுதியில் நாகப்பாம்புகள் அடிக்கடி உலாவுவதாகவும் குளம் தூர்வாரப்படாமல் இருப்பதும் குப்பை குளம் புதர் மண்டி காட்சியளிப்பதாலும் இப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு அடிக்கடி பாம்பு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினர் பாம்பு பிடிப்பதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாக தற்போது பரவிக் கொண்டிருக்கிறது.