பழனியில் இரு கோஷ்டியினருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இருவரை சரமாரியாக வெட்டியதில் மாரிமுத்து மற்றும்  சாலமன் ஆகிய இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இருவருக்கும் பழனி அரசுமருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் உள்ளது காமராஜர் நகர். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசித்துவரும் ஆரோக்கியராஜ் மகன் சாலமன்(வயது 21), ராஜா மகன் மாரிமுத்து ஆகிய இருவரும் நேற்று இரவு 8 மணியளவில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிலரும் அவர்களுடன் வேறு பகுதியைச் சேர்ந்த சிலரும் என 10க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று பயங்கர ஆயுதங்களுடன் காமர்ஜர் நகரில் நுழைந்து அங்கு பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து மற்றும் சாலமன் ஆகிய இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தலை, முகம், கை, கால், முதுகு ஆகிய பகுதிகளில் படுகாயமடைந்தனர். 

அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியே வந்ததை அடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் தப்பி ஓடியது‌. படுகாயத்துடன் கீழே கிடந்தவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌. 

மேலும் அரிவாள் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த மாரிமுத்து மற்றும் சாலமன் ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காரை வழிமறித்து நகை பறிக்க முயன்ற வழக்கில் கைதாகி சிறை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை அரிவாளால் வெட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.