அரூர் அருகே கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலரை நள்ளிரவில் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி அருகே முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தை உலுக்கியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வள கொள்ளையை தடுக்க முயற்சித்த கிராம நிர்வாக அதிகாரியை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி அழகிரி நகர் கிராமத்தை சேர்ந்த இளங்கோ, கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு மெனசி பகுதியில் கனிம வள கொள்ளை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மழையையும் பொருட்படுத்தாமல் தனது இரு சக்கர வாகனத்தில்
கனிம வளங்கள் கொள்ளை அடிப்பதாக கூறப்படும் பகுதிக்கு, கனிவள கொள்ளை கும்பலை கையும் களவுமாக பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது குண்டலமடுவு காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அவற்றை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க கிராம நிர்வாக அலுவலர் முயற்சித்த போது. அந்த டிராக்டர் நிற்காமல் விஏஓ மீது மோதும் வகையில் வேகமாகச் சென்றுள்ளது. அதிர்ச்சியடைந்த விஏஓ, அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சிக்காமல் தப்பித்து சுதாரித்துக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ, டிராக்டர் வாகனம் யாருடையது என்பது குறித்து ஆய்வு செய்ததில் அது, மெனசி பகுதியை சார்ந்த ராகவனுடைது என்றும், இந்த நபர் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிம வள கொள்ளைகளை திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது,

மணல் கொள்ளையை தடுத்த விஏஓ கொலை! எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போராட்டத்தில் குதித்த அரசு ஊழியர்கள்

இந்த கொள்ளை கும்பலுக்கு மெனசி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, பூதநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கும்பலிடம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தான் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பதால் தனக்கு இந்த கும்பல் பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருவதாகவும், இடையூறாக இருந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருவதாக தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளதாகவும், காவல் துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளித்ததாகவும் இளங்கோ தெரிவித்தார்.