அம்மா உணவகம் சூறையாடல்... கைதான வேகத்திலேயே இருவரும் ஜாமீனில் விடுதலை...!
இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நவசுந்தர், சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சோசியல் மீடியாவில் வைரலானது. இதனால் திமுகவிற்கு எதிராக கண்டன குரல்கள் பதிவானது.
சென்னை முகப்பேரில் உள்ள 10வது பிளாக்கில் உள்ள 92வது வட்ட அம்மா உணவகத்தில் இன்று காலை சென்ற திமுகவினர் சிலர் அங்கிருந்த பெயர்பலகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை கிழித்து எறிந்தனர். அத்துடன் உணவகத்தில் இருந்த உணவுப் பொருட்களையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
இது குறித்த வீடியோ வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, தமிழகத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாகவே திமுகவினர் வன்முறை அராஜகத்தில் தொடங்கி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், அம்மா உணவகத்தின் பெயர் பலகையை கிழித்த திமுகவினர் 2 பேரை நீக்க ஸ்டாலின் உத்தரவிட்டார். மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நவசுந்தர், சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 294, 427, 448 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நவசுந்தர், சுரேந்தர் இருவரும் சிறிது நேரத்திலேயே ஜாமீனில் வெளியே வந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.