Tamilnadu lockdown | தமிழ்நாட்டில் ஊரடங்கு? உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.!
ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் எதிரொலியாக கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்து தமிழ்நாடு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ், நாளுக்கு நாள் பரவல் வேகத்தை கூட்டி வருகிறது. இதன் காரணமாக செல்லி, மகராராஷ்டிரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பகலிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவலின் வேகம் டெல்டா வகை கொரோனாவை விட மூன்று மடங்கு அதிகம் என்பதால் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வியாபித்துவிட்ட நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், இரவு நேர ஊரடங்கை பிறப்பித்தல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா சமூக பரவலாக மாறிவிடும் என்ற அச்சத்தால் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் கடற்கரை மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை கொண்டாட்டங்களுக்கும் தடைவிதிக்க மறுக்கும் தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி கொரோனா பரவல் கூடிக்கொண்டே செல்வதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்னையில் நோய் கட்டுப்பாட்டு பகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அதிகம் உடைய மாநிலங்கள், சர்வதேச போக்குவரத்து அதிகம் நடைபெறும் மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை பிறப்பித்துவிட்ட நிலையில், தமிழ்நாடு அரசு புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்த பின்னரே அந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 141 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் தினசரி கொரோனா பாதிப்பு 397 ஆக உயர்ந்துள்ளது. 45 பேருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் அதில் பெரும்பாலானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் தான் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கில் மேலும் அறிவிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், தளர்வுகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குனர், பொது சுகாதாரத் துறை இயக்குனர், மருத்துவ நிபுணர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஓமைக்கிரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவீரபடுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், இக்கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்சானி சவுமியா சுவாமிநாதன் காணொலி வழியாக கலந்துகொள்கிறார். தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கை பிறப்பிப்பது குறித்து அவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.