குறிப்பாக பார்வையாளர்கள் அதிகம் கூடும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள், திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒமிக்ரான் பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதியிலிருந்து 1முதல் 8ம் வகுப்பு வரை என அனைவருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. தற்போது தான் இயல்பு நிலைக்கு மாணவர்கள் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதியதாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவ தொடங்கியது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்களில் பரவி உள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 415ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 79, குஜராத்தில் 43, தெலுங்கானாவில் 38, தமிழகத்தில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 39 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என்று மருத்துவர்கள் சங்கம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கத்தில் தலைவர் செந்தில் எழுதியுள்ள கடிதத்தில்;- தற்போது ஒமிக்ரான் தொற்று பரவும் நிலையில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பார்வையாளர்கள் அதிகம் கூடும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள், திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி கண்காணிக்க வேண்டும். பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட வேண்டும். மருத்துவர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க வகை செய்ய வேண்டும். இரண்டாம் கட்ட கொரோனா பரவலின் போது பயன்படுத்தபட்ட மருத்துவமனைகள், கோவிட்கேர் மையங்களில் தேவையான ஆக்சிஜன், பாதுகாப்புக் கவசங்கள், மருந்துகளைக் குறுகிய காலத்தில் அதிக அளவில் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
