எப்ப திருந்துவீங்க.. வெறும் லைக்கிற்காக உயிரை பணயம் வைக்கலாமா..? பள்ளி மாணவர்களின் வைரல் விடியோவால் சர்ச்சை..
சென்னை அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சீருடையில் பள்ளி மாணவி மற்றும் மாணவன் இருவர் ஓடும் ரயிலில் ஆபத்தான முறையில் நடைமேடையை உரசியப்படி , கம்பியை பிடித்து தொங்கியவாறு செல்லும் வீடியோ காட்சி தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரயில்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் நிகழும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது குறித்து ரயில்வே துறை சார்பில் தொடர்ந்து பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.கடந்த வாரத்தில் மட்டும் ஆபத்தான முறையில் , ஓடும் ரயிலில் பயணம் மேற்கொண்டு இருவேறு கொடூர விபத்துகள் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் நாக்பூர் ரயில் நிலையத்தில் 22 வயது வாலிபர் ஒருவர், ஆபத்தான முறையில் செல்பி எடுக்க முயற்சித்து , ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். அதுபோல், உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் ரயில்வே ஸ்டேஷனில் இரயில் வருவதை கூட கவனிக்காமல் விடியோ கேமில் முழ்கி இருந்த, இரண்டு சிறுவர்கள் இரயில் மோதி பலியாகினர். இந்த நிலையில் தற்போது சென்னையடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் பள்ளி சீருடையில் , மாணவி, மாணவன் இருவர் கம்பியை பிடித்து தொங்கியபடி , நடைமேடை உரசியப்படி பயணம் மேற்கொண்டு அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது . அற்ப லைக்கிற்காக உயிரை பணயம் வைத்து இளைஞர்கள், சிறுவர்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற ஆபத்தான சாகசங்களை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வீடியோ பதிவிட்டு கருத்துகள் கூறி வருகின்றனர். "