‘தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கனும்’... உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்...!
தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல்
கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கும் பொருட்டு முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நாதன் தாக்கல் செய்த பொது நல மனுவில், கொரோனா இரண்டாவது அலை பரவலால் அப்பாவிகள் பலர் உயிரிழந்து வருவதாகவும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி படுக்கைகளுக்கும், சாதாரண படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் ஒரு நாளுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவர் குணமடைந்து வீடு திரும்பும் வரை மற்றொருவர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.ரெம்டெசிவர் மருந்தை அரசு இலவசமாக வழங்குவதுடன், தற்போதைய அவசர நிலையை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, கொரோனா பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில், நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.