தூக்கி வீசப்பட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா..!நீலகிரியில் நடந்தது என்ன..?
நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அம்ரித்தை நியமித்து தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி ஆட்சியராக கூடுதல் பொறுப்பில் இருந்த கீர்த்தி பிரியதர்ஷினி மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா, இடமாற்றம் செய்யப்பட்டது அரசியல் தளத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதுக்குறித்தான எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து எழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டவர் எனவும் மக்களுக்கான திட்டங்களை அதிரடியாக கொண்டு வந்தவர் எனவும் மக்களால் பாராட்டப்பட்டவர். எனவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்வதற்கு எதிராக கருத்துகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் உள்ளூர் மக்களும் தெரிவித்து வந்தனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக செயல்பட்டு வந்தவர் இன்னசெண்ட் திவ்யா. நீலகிரி மாவட்ட ஆட்சியராக பொறுபேற்ற பிறகு சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு, தூய்மை இந்தியா பணியை சிறப்பாக முன்னெடுத்தார். இவரது அதிரடி திட்டங்களுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து, யானை வழித்தடங்களை மீட்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவோடு இணைந்து ஆக்கிரமிப்பு செய்த ரிசார்ட்டுகளை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியில் சிறப்பாகவும் யாருக்கும் வளைந்து கொடுக்காமலும் செயல்பட்டார் என்று மக்களால் பாராட்டப்பட்டார். இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், ''உச்ச நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் அவரை இடமாற்றம் செய்யக் கூடாது'' என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதன்பின்னர், யானை வழித்தடங்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.
இந்த வழக்கில் இடைக்கால மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
அதில், ''நிர்வாகரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு சூழலியல் ஆர்வலர்கள் , அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வனபகுதிகளை பெரும் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பதற்காக தமிழக அரசு திட்டபோடுவதாகவும் குற்றச்சாட்டினர். ''யானைகளின் வழித்தடத்தை மீட்டெடுத்து அவற்றை பாதுகாக்கும் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது'' என அறிக்கை ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீலகிரியின் பொறுப்பு ஆட்சியராக கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நீலகிரியின் புதிய ஆட்சியராக அம்ரித்தை நியமித்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்பு இவர் நகராட்சி நிர்வாகத்தின் இணைய ஆணையராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.