ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகவும்  ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்திருந்தனர். மேலும், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும்  உத்தரவிட்டிருந்தனர்.

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்கும் வகையில், சட்ட முன் வடிவு விரைந்து இயற்றப்படும் என கூறிய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. 

சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட வேலு என்பவர், தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது, ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்ட விரோத ஆயுதங்கள் இருப்பதாகவும் ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் நீதிபதிகள் கவலை தெரிவித்திருந்தனர். மேலும், ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து, ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்ட முன் வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய சட்டம் எப்போது இயற்றப்படும் என்பது குறித்துப் பதிலளிக்கத் தமிழக உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில், திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்" என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில் வரைவு சட்ட முன்வடிவு விரைந்து இயற்றப்பட்டால், அது காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

ஏற்கனவே டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் செப்டம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் போலீசார் நடத்திய ஸ்டாமிங் ஆபரேஷனில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.