சென்னையில் அதிர்ச்சி! காதலியின் தாயை கொலை செய்த காதலன்! என்ன காரணம்? வெளியான தகவல்!
முகப்பேரில் காதலியைத் திட்டியதால், காதலியின் தாயாரை காதலன் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

சென்னை முகப்பேர் கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அதிகாரி மைதிலி (64). இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகள் ரித்திகா (24) உடன் வசித்து வருகிறார். இவர் போரூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் ரித்திகாவும், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஷியாம் கண்ணன் (22) என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஜூனியர் மாணவரான இவரை கல்லூரி படிக்கும் போதே காதலித்துள்ளார்.
ஷியாம் கண்ணனும் ரித்திகாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே மகளின் காதலுக்கு தாய் மைதிலி எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு ரித்திகா வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதை தாய் மைதிலி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட ரித்திகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் தனது காதலன் ஷியாம் கண்ணனை செல்போன் மூலம் வரவழைத்து, சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மகளை காணவில்லை என்று தேடிய போது சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த மகளை கோபமடைந்த மைதிலி, மகள் ரித்திகாவை திட்டியதோடு, வீட்டுக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அவருடன் ஷியாம் கண்ணனும் வந்துள்ளார். அப்போது, மைதிலிக்கும் ஷியாம் கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் கண்ணன் மைதிலியை கீழே தள்ளி அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஷியாம் கண்ணனே போலீஸுக்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் மைதிலி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஷியாம் கண்ணனையும் கைது செய்தனர். ரித்திகாவிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், ஷியாம் கண்ணன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் கோபுரம் காலனியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தனியார் ஐஏஎஸ் அகாடமியில் போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்தது. காதலியை திட்டியதால் காதலியின் தயாரையே கழுத்தை நெரித்து கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.