காதுக்கு பதிலாக தொண்டையில் அறுவை சிகிச்சை..! மருத்துவர்களின் அலட்சிய போக்கால் அவதிப்படும் சிறுமி..!
சென்னையில் 9 வயது சிறுமிக்கு காதிற்கு பதில் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை அம்பத்தூர் அருகே இருக்கும் பட்டரைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ராஜஸ்ரீ(9). அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 5 வகுப்பு படித்து வருகிறார். ராஜஸ்ரீக்கு காதில் கம்மல் போடும் இடத்தில் கட்டி உருவாகி இருக்கிறது. இதனால் கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வைத்திருக்கிறார். இதையடுத்து சிகிச்சைக்காக ராஜஸ்ரீயை அம்பத்தூரில் இருக்கும் ஸ்டெட்போர்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார் செல்வம்.
அரசு உதவி பெறும் மருத்துவமனையான அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். பின்னர் அறுவைசிகிச்சை மூலம் கட்டியை அகற்ற முடிவை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிறுமிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. ஆனால் காதிற்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர்.
அறுவை சிகிச்சை முடிந்து வெளியே கொண்டுவரப்பட்ட சிறுமியை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தவறான சிகிச்சை அளித்தது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது. திரண்டு வந்த அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். வேறு ஒரு சிறுவனுக்கு செய்ய வேண்டிய ட்ரான்சில் கட்டி அறுவை சிகிச்சையை, ராஜஸ்ரீக்கு மருத்துவர்கள் செய்துள்ளது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கூறும்போது, தொண்டையில் இருந்து ட்ரான்சில் அகற்றப்பட்டுள்ளதால் வருங்காலத்தில் சிறுமிக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும் அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து சிறுமிக்கு இழப்பீடு வழங்குவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவர்களின் அலட்சிய போக்கால், சிறுமிக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.