அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுகவின் அமைதிப் பேரணி காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில், அமைச்சர்கள், எல்எல்ஏக்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நாளை காலை 08.00 மணியளவில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் வாலாஜா சாலை அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளார்கள். இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்களே இன்னும் 2 நாட்கள் தான்! பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

* போர் நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

* கலங்கரை விளக்கத்தில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் காந்தி சிலை வரை அனுமதிக்கப்பட்டு இராதா கிருஷ்ணன் சாலை வழியாக திருப்பி விடப்படும். 

* பெல்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை செல்ல அனுமதிக்கப்படாது வாலாஜா சாலை X பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை X திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு அண்ணா சிலை வழியாக செல்லலாம்.

* மவுன ஊர்வலம் வாலாஜாயில் வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும். 

அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.