குறியீட்டு எண் ஒதுக்கியதன் மூலம் தமிழகத்தில் 7,459 கோயில்கள் கண்டுபிடிப்பு
குறியீட்டு எண் ஒதுக்கியதன் மூலம் இதுவரை தமிழகத்தில் 7,459 கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறியீட்டு எண் ஒதுக்கியதன் மூலம் இதுவரை தமிழகத்தில் 7,459 கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 22,610 கட்டிடங்கள், 33,615 மனைகள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இந்த நிலங்களை தனியார் தங்களது பெயரில் பட்டா மாற்றம் செய்தும், பதிவு செய்தும் பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார் வந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில், அந்த நிலங்களை கண்டறியும் வகையில் வருவாய்த்துறை, அறநிலையத்துறை அடங்கிய குழு அமைக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அப்போதைய கமிஷனர் ஜெயா உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு, நிலங்களை ஆவணங்களுடன் ஒப்பிட்டு, அதை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபுறம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கும் பணி கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டிருந்த கொள்கை விளக்க குறிப்பின் படி 36,662 கோயில்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், குறியீட்டு எண் ஒதுக்கீடு செய்த போது அறநிலையத்துறை வசமிருந்த பழமையான கோயில்கள் ஏராளமானவை கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டில் மட்டும் 3,528 கோயில்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் குறியீடு எண் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், தற்போது மேலும் 3,931 ேகாயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 7,459 கோயில்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து அந்த கோயில்களுக்கு குறியீட்டு எண் ஒதுக்கீடு செய்து இருப்பது அந்த துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.