கிடுகிடுவென உயரும் டீசல் விலை..! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!
கடந்த சில நாட்களாக டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. நேற்று 21 காசுகள் அதிகரித்த டீசல் விலை, இன்று 22 காசுகள் அதிகரித்து 70.56 ரூபாயாக இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இடையில் சில தினங்கள் பெட்ரோல் விலை குறையவும் செய்தது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.58 ரூபாயாக இருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் விலை இதே நிலையில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.