கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்து நடத்துநர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று மாதவரத்திற்கு வந்திருக்கிறது. பேருந்தை ஓட்டுநர் கோவிந்தசாமி(53) ஒட்டியிருக்கிறார். நடத்துநராக பாடியநல்லூரில் இருக்கும் குமரன் தெருவை சேர்ந்த வீரமுத்து (53) என்பவர் பணியில் இருந்துள்ளார். 50 பயணிகளுடன் நள்ளிரவில் பேருந்து மாதவரம் டெப்போவிற்கு வந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று அதிகாலையில் டீசல் போடுவதற்காக கோயம்பேடு பணிமனைக்கு ஓட்டுனரும், நடத்துநரும் பேருந்தை கொண்டுசென்றுள்ளனர். மாதவரம் ரவுண்டானா அருகே கோயம்பேடு மார்கெட்டிற்கு செல்வதற்காக சிலர் ஏறியுள்ளனர். பாடி மேம்பாலம் அருகே இருக்கும் தாதங்குப்பம் என்கிற இடத்தில் பேருந்து வந்துள்ளது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து பயங்கரமாக மோதியிருக்கிறது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. முன்னால் அமர்ந்திருந்த நடத்துநர் வீரமுத்து தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினார். ஓட்டுநர் மற்றும் பயணிகளில் சிலர் படுகாயமடைந்தனர். அந்த பகுதியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விரைந்து வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நடத்துநர் வீரமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ஓட்டுநர் கோவிந்தசாமி மற்றும் பயணி அருள்தாஸ் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.