சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னையில் உள்ள பத்ம ஷேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் ராஜகோபாலன் எனும் ஆசிரியர், மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, தகாத முறையில் நடந்துகொண்டது தொடர்பான புகார்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு கொடுத்தாக புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு புகார்களை தெரிவித்தனர்.மேலும், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் சிலர் புகார் அளித்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி தாளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் 11-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் சம்மன் அனுப்பிருந்தது.

இந்நிலையில், பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சார்பில் விளக்கமளிக்க வழக்கறிஞர் நாகராஜன் உள்ளிடோர் ஆணையத்தில் நேற்று ஆஜராகினர். மேலும், சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சைபெறுவதால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று விளக்கமளித்தனர். மேலும், குற்றச்சாட்டு குறித்துஅவர்கள் அளித்த விளக்கங்களைஆணைய அதிகாரிகள் வாக்குமூலமாகப் பதிவு செய்தனர். பின்னர், சிவசங்கர் பாபா நேரில் விளக்கமளிக்க வேண்டும் என்று ஆணைய அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி இருந்தனர். 

இந்நிலையில், சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 தனித்தனி புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.