கட்டடக்கழிவுகளை சாலையில் கொட்டினால் ரூ.5 லட்சம் அபாரதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Fine For Dumping Construction Waste on the Road: சென்னை ரிப்பன் மாளிகையில் பாதுகாப்பான கட்டுமானம் குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பற்றிய பயிலரங்கம் மற்றும் நெகிழி பயன்பாட்டு தடை செய்யும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைக்குழுக்கள் அடங்கிய பிரச்சார வாகனத்தினை மாநகராட்சி மேயர் பிரியா துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மண்டல குழு தலைவர்கள் பங்கேற்றனர்.

சென்னை மேயர் பிரியா பேட்டி

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா கூறுகையில், ''உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணி நடந்தது. இதேபோல் ரிப்பன் மாளிகையிலும் அந்த பணி நடந்தது. சென்னை மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் கட்டடக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது'' என்றார்.

கட்டடக்கழிவுகளை அகற்ற வேண்டும்

தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, ''இந்த மாதம் 21ம் தேதி இந்த திட்டம் நடைமுறைக்கு இருக்கிறது. இதனால் தான் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து ஆலோசனை வழங்கப்பட்ட்டுள்ளது. இந்தக் கட்டடக்கழிவுகள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கழிவுகள் நடுத்தர கட்டட கழிவுகள் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

சாலையில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் அபராதம்

ஒரு ஏக்கர் அதிகமான இடம், ஆறு மீட்டர் தூரத்திற்கு தகரம் மூலம் சுற்றுச் சுவர் அமைத்து தான் கட்டடங்களை அகற்ற வேண்டும். கட்டடங்கள் இடிக்கும் பணியின் போது தகரம் மூடுவது மட்டுமல்லாமல் துணிகளை வைத்து மூட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சாலையில் கட்டடக் கழிவுகளை கொட்டினால் உள்பட மாநகராட்சி விதிமுறை மீறி செயல்படுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம்

10 ஆயிரம் மீட்டர் முதல் 25 ஆயிரம் மீட்டர் உள்ள கட்டடங்கள் இருக்கும் போது அவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 500 முதல் 20 ஆயிரம் சதுர தூரமுள்ள கட்டடங்கள் இருக்கும் பொழுது அவர்கள் விதியை பின்பற்றப்படவில்லை என்றால் 10,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரை அபராத விதிக்கப்படும்.

கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுரை

குறைந்தபட்ச கட்டடக்கழிவுகள் அகற்றப்படாமல் இருந்தால் ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும். ஒரு மெட்ரிக் டன் கீழுள்ள கட்டடக்கழிவுகள் பொதுமக்களே அகற்றிக் கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள கட்டடக்கழிவுகளை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புக்கு கொண்டு வாகனங்கள் மூலம் அகற்றலாம் . கட்டடக்கழிவுகளை அகற்றப்படாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும். கட்டடக்கழிவுகளை அகற்ற கட்டட உரிமையாளர்களுக்கு 15 நாள் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகும் அவர்கள் மெத்தனமாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும்'' என்று மேயர் பிரியா கூறியுள்ளார்.