Australia vs Sri Lanka: ஆஸி.,க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. முதல் 4 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 4-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று 4-0 என டி20 தொடரை வென்றது.
கடைசி டி20 போட்டி இன்று மெல்போர்னில் நடந்தது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் இலங்கை அணியும் களமிறங்கின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 154 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியில் அடித்து ஆடிய மேத்யூ வேட் அதிகபட்சமாக 43 ரன்கள் அடித்தார். 27 பந்தில் வேட் 43 ரன்கள் அடித்தார். மேக்ஸ்வெல் 29 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 23 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இலங்கை அணியில் நிசாங்கா (13), காமில் மிஷாரா (1), சாரித் அசலங்கா (20), லியானகே (8) ஆகியோர் ஒருமுனையில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அரைசதம் அடித்தார். 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்துவிட்ட நிலையில், 5வது விக்கெட்டுக்கு குசால் மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த தசுன் ஷனாகா பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் அடித்தார். இலங்கை அணி 154 ரன்களை அடித்து ஆட்டம் டை ஆன நிலையில், வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது தசுன் ஷனாகா ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவரின் 4வது பந்தில் ஷனாகா ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி. இதையடுத்து டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 4-1 என வென்றது.