Asianet News TamilAsianet News Tamil

ஆடி பிறந்தாச்சி.. இன்று தேங்காய் சுடுவது ஏன் என்று தெரியுமா?

இன்று ஆடி முதல் நாள் என்பதால் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது ஏன் என்று தொகுப்பில் மூலம் அறிந்து கொள்ளலாம்.

why we celebrate aadi month coconut burning ritual
Author
First Published Jul 17, 2023, 11:55 AM IST

ஆடி மாதம் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆகும். இந்த மாதத்தை அம்மன் மாதம் மற்றும் அம்பாள் மாதம் என்று சிறப்பாக கூறப்படுகின்றது. இந்நாளில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு ஆகியவை சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதத்தில் பல பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஆடி பிறப்பன்று அதாவது இன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்?

  • ஆடி மாதம் ஜூலை 17, அதாவது இன்று தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 17 வரை உள்ளது. இன்று ஆடி முதல் நாள் என்பதால் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை கொண்டாட்டம் நிகழ்ச்சி மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.
  • மகாபாரத போர், அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில்  நடைபெற்றது. இந்த போரானது ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது. மேலும் ஆடி-18 அன்றுமகாபாரதப் போர் முடிவுக்கு வந்தது என்று சொல்லப்படுகின்றது.
  • இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1ஆம் தேதி அன்று மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி பூஜை செய்தனர். இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாகக் கூறப்படுகின்றது.

இதையும் படிங்க: ஆடி மாதம் தொடங்கியாச்சு...புதிதாக திருமணமான ஜோடிகள் ஒன்று சேரக்கூடாது..ஏன் என்று தெரியுமா? 

தேங்காய் சுடுவது எப்படி?
முதலில் ஒரு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதன் மேலுள்ள நார்களை அகற்றிவிட்டு, தேங்காய் மேற்பகுதியில் உள்ள ஓடு மெலிதாகும்  வரை அதனை நன்கு தரையில் தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் தேங்காய் கண்ணில் துளையிட்டு தேங்காயில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி, பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் ஆகியவை கலந்த கலவையை அவற்றுள் போட்டு ஒரு கூரிய முனையுடைய அழிஞ்சிமர குச்சியை தேங்காயில் சொருக வேண்டும். பின் அந்த குச்சியை சுற்றி மஞ்சள் பூசி துளையை அடைத்து, நெருப்பு மூட்டிய இடத்தில், தேங்காயை சுட வேண்டும். சிறிது நேரம் கழித்து சுட்ட தேங்காயை அருகில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு எடுத்துச்சென்று வழிபட வேண்டும். பின் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு தேங்காயை படைத்துவிட்டு  உண்ண வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios