Asianet News TamilAsianet News Tamil

பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டு எந்தப் பெயரில் பிறக்க இருக்கிறது; இந்த ஆண்டின் சிறப்புக்கள் என்ன?

தமிழ் மாதங்களின் முதல் மாதம் சித்திரை மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிறப்பை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளைய தினம் கொண்டாடப்படுகிறது.

tamil new year 2024 why we celebrate tamil new year and  specials in tamil mks
Author
First Published Apr 13, 2024, 2:58 PM IST

சித்திரை மாதம் என்பது இறைவனுக்குரிய மாதங்களில் ஒன்றாகும். எனவே, இந்த நாளில் வரும் முக்கிய நாட்களில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக, சித்திரை முதல் நாள், அதாவது நாளைய தினத்தன்று செய்யப்படும் வழிபாடுகளுக்கு முழுமையான பலன்கள் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்நாளில், பஞ்சாங்கம் படிப்பதும் மிகவும் விசேஷமான வழிபாடாகும்.

சித்திரை திருநாள்?

சித்திரை திருநாள் என்பது வசந்த காலத்தின் ஆரம்பமாக கருதப்படுகிறது. ஆதலால் நாளைய அன்று மக்கள் உற்சாகமாக தமிழ் புத்தாண்டைக் கொண்டாடுவது வழக்கம். உங்களுக்கு தெரியுமா.. இந்த சித்திரை மாத பிறப்பு ஆனது, தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளாகவும், கேரளாவில் சித்திரை விஷூவாகவும் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த தொகுப்பில், தமிழ் புத்தாண்டு பற்றிய மேலும் விரிவான தகவல்களை குறித்து அறியலாம்..

தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது ஏன்?
 சூரிய பகவான் நவகிரகங்களில் தலைமை கிரகமாக விளங்குகிறது. எனவே, சூரிய பகவானின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது. அதாவது, சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை நாம் மாதப்பிறப்பு என்று சொல்லுகிறோம். அதுமட்டுமின்றி, மேஷம் முதல் மீனம் வரை தன்னுடைய ஒரு சுற்று பயணத்தை நிறைவு செய்த சூரிய பகவான், மீண்டும் மேஷத்தில் தனது புதிய பயணத்தை தொடங்கும் நாளை தான் நாம் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம். 

2024 தமிழ் புத்தாண்டு எப்போது, எந்தப் பெயரில் பிறக்கிறது?
தற்போது சோபகிருது ஆண்டு நடைபெற்று வருகிறது. இது இன்று (ஏப். 13)முதல் நிறைவடைகிறது. மேலும் ஏப்ரல் 14ஆம் தேதி, அதாவது நாளைய தினத்தன்று "குரோதி" எனப்படும் புதிய ஆண்டு பிறக்கவுள்ளது. அதுமட்டுமின்றி, நாளைய தினம் சூரிய பகவான் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே மங்களகாரகனான குரு பகவான் அங்கு தான் இருக்கிறார். குருவுடன் சூரியன் இருக்க போவதால், அந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும்... மேலும் இவர்களின் இந்த சேர்க்கையானது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நடக்கும் என்று ஜோதிடம் சொல்லப்படுகிறது. 

இதையும் படிங்க:  சித்திரை மாத ராசி பலன்கள் 2024: எப்படி இருக்கும் தமிழ் புத்தாண்டு ..? அதிஷ்டம் வரபோகும் ராசி எது..?

2024 தமிழ் புத்தாண்டு சிறப்புகள்:

  • இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு ஆனது கூடுதல் விசேஷமாக சூரியனுக்குரிய நாளான ஞாயிற்றுக்கிழமையில் தான் பிறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அது மட்டுமன்றி,  முருகப்பெருமானுக்குரிய சஷ்டி திதியும், பெருமாளுக்குரிய திருவோண நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
  • இந்த குரோதி ஆண்டில் குரு பகவான் மற்றும் சூரிய பகவானும் இணையும் நாளில் தான் தமிழ் புத்தாண்டு  பிறப்பதால், திருமண தடை உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு தடைகள் நீங்கி, திருமணம் நடக்கும்.
  • அதுபோல, இந்த குரோதி ஆண்டில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும், தீராத நோயால் அவதிப்பட்டவர்களுக்கு விடுதலையும் கிடைக்கும்.
  • இந்த ஆண்டு குரு மற்றும் சூரியன் பலமாக இருப்பதால் இந்த இரண்டு கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்றும் ஜோதிடம் கூறுகிறது.

2024 தமிழ் புத்தாண்டு நேரம்:
சஷ்டி திதியானது, இன்று மாலை 05.01 மணிக்கு தொடங்கும். மேலும், நாளைய தினத்தன்று (ஏப்.14) மாலை 04.47 வரை வளர்பிறை சஷ்டி இருக்கும். எனவே நாளை அன்று முருக வழிபாட்டு, தமிழ் புத்தாண்டு வழிபாட்டு என இரண்டையும் சேர்த்தே செய்வது தான் சிறப்பு.

இதையும் படிங்க: Tamil New Year 2024 : தமிழ் புத்தாண்டில் செய்ய வேண்டியவை..? செய்யக் கூடாதவை..?

வழிபாட்டு செய்யும் முறைகள்:

  • இன்று இரவே வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளுடன் உங்களால் முடிந்த பிற பழ வகைகள், தானிய வகைகள், நகைகள், பணம் ஆகியவற்றை வைக்கவும். இவற்றுடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும் வையுங்கள்.
  • பிறகு நாளை (ஏப்.14) காலையில் எழுந்ததும் பூஜை அறையில் வைத்துள்ளதை பார்த்து, தொட்டு வணங்கவும். பின் கடைசியாக உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
  • காலை 07.30 முதல் 08.30 வரை தான் சித்திரை திருநாள் வழிபாட்டினை செய்வதற்கு உகந்த நேரமாகும்.

இவற்றை செய்ய மறக்காதீங்க:

  • இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, சூரிய பகவானையும், குலதெய்வத்தை, மகாலட்சுமி ஆகியோரை வழிபட்டு, இந்த ஆண்டு செல்வ செழிப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
  • அந்நாள் முழுவதும் இனிப்பு, புளிப்பு உள்பட அறுசுவைகள் கொண்ட உணவுகளை சமைத்து, இறைவனுக்கு படைத்து, பிறகு நீங்கள் சாப்பிட வேண்டும். காரணம், இந்த புதிய ஆண்டில் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதை குறிக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Follow Us:
Download App:
  • android
  • ios