மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் நடைபெற்ற இந்த சிறப்பு பெற்ற துவக்க நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 

108 வைணவ தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா முதன்மை வகிக்கிறது. அந்த வகையில் ஆண்டு தோறும் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வர். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இச்சிறப்பு பெற்ற விழா வரும் வரும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் ஊன்றும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred



நிகழ்ச்சியில் ஆயிரம்பொன் சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதற்காக அழகர்கோவிலில் உள்ள நூபுரகங்கையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தகால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் முகூர்த்தகால் நடப்பட்டது.

கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்சியாக முகூர்த்தகால் நடப்பட்டதை தொடர்ந்து, கள்ளழகர் மதுரை வரும் போது அவர் எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தகால் நடப்பட்டு மதுரை நகர் எங்கும் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா வரும் 23ம் தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்குகிறது . இதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 2-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் வரும் 3- ம் தேதி நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.