இரண்டாயிரம் சதுரடிகள் கொண்ட வீட்டை ஆறு இலட்சத்தில் கட்ட முடியுமா? முடியும். எப்படி?
1000 சதுர அடி வீட்டை நாம் கட்டும்போது அதற்கான அஸ்திவாரம் அமைக்கவே தோராயமாக ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.
மொத்தத்தில் இன்றைய சந்தை நிலவரத்தில் 1000 சதுரடி வீட்டைக்கட்டி முடிக்க சராசரியாக 13 இலட்சம் முதல் 15 இலட்சம் வரையில் செலவாகும்.
ஆனால், 2000 சதுரடிகள் கொண்ட ஒரு வீட்டை வெறும் ஆறு இலட்சத்தில் கட்ட முடியுமா? என்ற கேள்விக்கு முடியும் என்ற பதில் வந்து விட்டது.
அதாவது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தைக் கையாண்டு அதன்படியான மூலபொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமாக நமது வீடுகள் மற்றும் வசிப்பிடம் சார்ந்த எல்லா கட்டமைப்புகளுக்கும் ஆகக்கூடிய செலவினங்களை பெருமளவுக்குக் குறைத்துக் கொள்ள முடியும் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் மற்ற எல்லாவித பயன்பாட்டுக் கட்டமைப்புகளுக்கும் இது ஒரு வரம் என்றால் அது மிகையல்ல.
கொஞ்சம் தலை சுற்றும் விஷயம்தான். ஆனால் அது எப்படித்தான் சாத்தியம் ஆகிறது..?..
எல்லாம் நவீன டெக்னாலஜிதான். அது என்ன அப்படியொரு டெக்னாலஜி..?
அதன் பெயர் ஜி.எப்.ஆர்.ஜி. எனப்படும் ‘கிளாஸ் பைபர் ரீ என்போர்ஸ்டு ஜிப்சம் பேனல்கள்’ ஆகும்.
இது உலக நாடுகள் பலவற்றில் இருக்கக்கூடிய டெக்னாலஜிதான். சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த கட்டிட மூலப்பொருள்களில் இந்த ஜி.எப்.ஆர்.ஜி. போர்டுகள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. மேலும் தன் சிறப்பம்சமாக இருப்பது அதன் குறைவான விலைதான்.
உரத்தொழிற்சாலைகளிலிருந்து வருடாவருடம் டன்கணக்கான கழிவுகள் தேங்குகின்றன. அந்தக் கழிவுகளிலிருந்தும், ஜிப்சம் என்ற ஒருவகை உப்புடனும், இந்த இரண்டுடனும் கண்ணாடி இழைகள் எனப்படும் கிளாஸ் பைபரும் சேர்த்து இணைத்து அந்த ஜி.எப்.ஆர்.எஸ் தொழில் நுட்பம் வடிவம் பெறுகிறது.
அத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு சிமெண்டு மற்றும் இரும்புக்கம்பிகள் ஆகியனவும் இதில் இணைந்து அதன் பயன்பாட்டு தன்மையை உறுதி செய்கின்றன. இவை முழுக்க, முழுக்க மாறுபட்ட மூலப்பொருள்களின் சேர்க்கையைக் கொண்டதால் பழைய தொழில்நுட்பச் செலவுகள், மூலப்பொருட்களுக்கான தேவைகள், ஆட்கூலிகள் எதுவும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.
பழைய முறையில் 1000 சதுரடிகள் கொண்ட ஒரு வீட்டைக் கட்டி முடிக்கத் தோராயமாக 8 முதல் 10 மாதங்கள் வரையில் கால அவகாசம் தேவைப்படும். அதற்கான மனித உழைப்பும் அதில் தேவையாக இருக்கிறது.
ஆனால் இந்த நவீன முறையில் 1000 சதுரடியில் வீடு கட்டுவதற்கான கால அவகாசமானது வெறும் ஒரு மாதம்தான் ஆகும். மேலும் மற்ற அமைப்பியல் ரீதியான கட்டுமான செலவினங்களும் பெரிய அளவில் இல்லாததும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
மிக முக்கியமாக பூமியின் ஈர்ப்பு விசைகள் மற்றும் பூமி அதிர்வுகள், வெப்பம், குளிர் போன்ற இயற்கையின் மாற்றங்களை இந்த ஜி.எப்.ஆர்.ஜி. பேனல்கள் தாங்கும் தன்மை வாய்ந்தவை.
பொதுவாக காங்கிரீட் கட்டிடங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் ‘டெட்லோடு’ என்று சொல்லப்படும் வெளியில் தெரியாத கட்டிடத்தின் உள்ளமைப்புகள் தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. இந்த நவீன முறையால் ‘டெட்லோடு’ என்பது பெருமளவுக்கு தவிர்க்கப்படுகிறது.
அதாவது இந்த பேனல்களுக்கு இடைவெளிகளில் கான்கிரீட் கலவையை நிரப்புவதன் மூலமாக அதை ஒரு செங்குத்தான பில்லரைப் போன்று பயன்படுத்திக்கொள்ளமுடியும். பேனல்களுக்கு நடுவில் அமைந்திருக்கும் குறிப்பிட்ட இடைவெளிகள் பலவிதங்களிலும் நமக்கு உபயோகமாக இருக்கும்படி அமைந்துள்ளன.
அந்த இடைவெளிகளில் தண்ணீருக்கான பைப் இணைப்புக்கள், ஒயரிங் வேலைகள் உள்ளிட்ட மற்ற வேலைகளையும் செய்துகொள்ளலாம். அந்த இடைவெளிகளில் இரும்புக் கம்பிகளைப் பொருத்துவதன் மூலமாகவும் அதை ஒரு உறுதியான கட்டமைப்பாக மாற்ற இயலும்.
இரண்டுக்கும் மேற்பட்ட மாடிகள் கொண்ட கட்டிட அமைப்புக்கு இந்த பேனல்கள் அழகாகப் பொருந்தக் கூடியவையாகும். இந்த பேனல்களுக்கு இடைவெளிகளில் கான்கிரீட் நிரப்புவதன் மூலமாகவும் அல்லது ஸ்டீல்பார்களை இடைவெளிகளில் அமைப்பதன் மூலமாகவும் செங்குத்து உயரத்தில் அவற்றைப் பில்லர்கள் போன்று பயன்படுத்தி உயரமான கட்டமைப்புகளை உருவாக்கலாம்.
சாதாரணமாக சிமெண்டு கொண்டு கட்டப்படும் கட்டிட அமைப்புகளுக்கு பில்லர்கள், காலம்கள் எனப்படும் குறுக்கும் நெடுக்குமான தாங்கு தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த முறையில் அந்த அமைவுகள் குறைவான அளவில்தான் தேவைப்படுகிறது. தவிரவும், பூச்சு வேலைகளுக்கு இதில் அவசியமே இல்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
சுற்றுப்புறச் சூழலைப் பாதிக்காத வகையில் அமைந்த இந்த தொழில்நுட்பம் நல்ல முறையில் பயன்தரும் என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே நம்ம ஊர் கட்டிடவியல் வல்லுனர்கள் செயல்முறையில் செய்தே காட்டியிருக்கின்றனர்.