அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு இவ்வளவு பயன்கள் காத்திருக்கு…
பெரியவர்கள் எல்லா வசதிகளையும் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் குழந்தைகள் பெரும்பாலான வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்யப்படுகிற பெரும்பாலான வசதிகள் குழந்தைகளுக்கானவை. நீச்சல் குளத்தை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அனைத்து குழந்தைகளும் நீச்சல் குளத்தைப் பயன்படுத்துகின்றனர். வார விடுமுறை நாட்களை அங்கு செலவிடுகின்றனர். கோடை காலத்தில் நீச்சல் குளத்தை பயன்படுத்துவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
‘வீடியோ கேம் பார்லர்’, ‘இன்டோர் கேம்ஸ்’, நூலகம் போன்ற பல்வேறு வசதிகள் குழந்தைகள் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன.
குழந்தைகளுக்கு தரப்படுகிற வசதிகள்
முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் குழந்தைகளை பகலில் கவனித்துக்கொள்கிற காப்பக வசதி. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் குழந்தைகளை பகல் நேரத்தில் பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் அதற்கான வசதி தற்போது செய்யப்பட்டு வருகிறது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பைப்பற்றி எந்த அச்சமும் இல்லாமல் வேலைக்கு போகலாம்.
அடுக்குமாடி குடியிருப்பு என்பது முழுவதுமாக பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் பூங்கா, விளையாட்டு அரங்கங்கள் என்று எல்லா இடங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
தற்போது வீடு வாங்குபவர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் அருகிலேயே பள்ளிக்கூடமும் மருத்துவமனையும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான காரணமும் குழந்தைகளின் நலனில் உள்ள அக்கறைதான்.
அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் என்னென்ன பயன்கள் இருக்கு
நிலம் வாங்குவதில் ஏற்படுகிற சட்டச் சிக்கல்கள் எதுவும் அடுக்குமாடி குடியிருப்பில் உறுதியாக இல்லை. அதற்கான அனைத்து பொறுப்பையும் கட்டுமான நிறுவனங்களே ஏற்றுக் கொள்கின்றன. இது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோருக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆறுதல்.
வீடு கட்டும் ஒவ்வொரு நிலையிலும் அனுமதிக்காக காத்துக்கிடக்க தேவையில்லை. மின்சாரம், குடிநீர் முதலிய அடிப்படை தேவைகளுக்கான இணைப்புக்கும் காத்திருக்க வேண்டியதில்லை.
அனைத்துவிதமான அனுமதிகளையும் கட்டுமான நிறுவனங்களே தனது பொறுப்பில் செய்து கொடுக்கின்றன. இவையெல்லாம் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவோருக்கு கிடைக்கிற பயன்கள்.