எடுபடுமா எடியூரப்பா வியூகம்? பிரச்சனைகளில் இருந்து விடுபடுவாரா ? அல்லது சிக்குவாரா ?
கர்நாடக முதலமைச்சராக இன்று பதவியேற்க எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும், அவர் ஆளுநரிடம் வழங்கியுள்ள ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் கடிதத்தை நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதால் இப்பிரச்சனையில் இருச்ழ தப்பிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகா முதலமைச்சராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாகா உத்தரவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவு 2 மணிக்கு வழக்கு தொடரப்பட்டது.
இதிகாலை 5 மணி வரை இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர்.
நீண்ட நேர ஆலோசனைக்குப் பிறகு, நீதிபதிகள் ஏகே. சிக்கிரி, அசோக் பூசன், எஸ்ஏ போடப் ஆகியோர் அடங்கிய அமர்வு, எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்க தடை விதிக்க முடியாது என மறுத்துவிட்டது.
ஒரு மாநில ஆளுநரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றும், அதே நேரத்தில் எடியூரப்பா ஆளுநரிடம் வழங்கிய தனக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் பட்டியல் மற்றும் கடிதத்தை நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் இந்த கடிதத்தின் அடிப்படையில் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கே உண்டு என்றும் நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்தனர்.
அறுதிப் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்றால் இன்று அவருக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றமே அவரது பதவியைப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையை நிருபிக்க தேவையான எம்எல்ஏக்களை எப்படிக் கொண்டு வருவார்? குதிரைப் பேரத்துக்கு இது வழி வகுக்குமா? என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் எடியூரப்பா தப்பிப்பாரா ? எடியூரப்பாவின் வியூகம் வெற்றி அடையுமா ?