மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி வாலாங்குளம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அமைச்சர்களுக்கு விளக்கினார். இதனை தொடார்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கோவை மாநகராட்சிக்கு 590 கோடி பாதாள சாக்கடை திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பில்லூர் குடிநீர் திட்டம் 780 கோடி செலவில் ஒரு வருடத்தில் நிறைவடையவுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக உள்ளது என்றார்கள் அதை இன்று பார்வையிட்டோம். சிறுவாணி அணை தொடர்பாக கலைஞர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் தரவில்லை. முதல்வர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்திற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. இனி அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெரும் முயற்சி எடுக்கப்படும். மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதைப்போல ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அறிக்கை இன்னும் வரவில்லை. எங்கு தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சியில் ஐந்து முக்கியமான சாலைகளை இணைக்கும் விதமாக 145 கோடி திட்டம் துவங்கப்பட உள்ளது. கோவை மதுரை சென்னை போன்ற இடங்களிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கான பணி தொடர்பாக ஹைதராபாத்தில் சென்று அதிகாரிகள் பார்த்து வந்துள்ளனர். வெள்ளலூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
