பெண்களுக்கு மாதம் ரூ.5,000.. ‘கோவா’ மாநிலத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.. ப.சிதம்பரத்தின் உள்குத்து..
கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 40 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வாக்குறுதியில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ .5000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று திரிணாமுல் காங்கிரசின் கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மஹூவா மொய்த்ரா தெரிவித்து இருக்கிறார்.
இந்த திட்டத்திற்கு ‘கிரஹ லக்ஷ்மி’ என பெயரிடப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கையாள்வதில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்ணின் கணக்கில் நேரடியாக மாற்றப்படும்’ என்று அவர் கூறினார். மேலும், இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு விரைவில் தங்கள் கட்சி அட்டைகள் விநியோகத்தை தொடங்கும்.
அந்த அட்டையில் அடையாள எண் இருக்கும் என்றும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு இது செயல்படுத்தப்படும். மாநில பா.ஜனதா அரசு வருமான உச்சவரம்பை நிர்ணயித்து 1.5 லட்சம் பேருக்கு வெறும் ரூ.1,500 மட்டும் வழங்கி வருவதாக கூறிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த உச்சவரம்பை நீக்கி 3.5 லட்சம் பெண்களுக்கு வழங்கும்’ எனவும் உறுதியளித்தார்.
திரிணாமுல் காங்கிஸ் வாக்குறுதி குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியான ஒரு கணிதம் இங்கே உள்ளது. கோவாவில் 3.5 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் வழங்கினார், மாதத்திற்கு 175 கோடி ரூபாய் செலவாகும். வருடத்திற்கு சுமார் 2100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். கோவா மாநிலத்தின் ஒரு சிறிய கணக்கை எடுத்துக் கொண்டால், அம்மாநிலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முடிவில் 23,473 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் உள்ளது. கடவுள் அருள் புரியட்டும். கோவாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.