தனது மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும் என மாவட்டச் செயலர்களிடம் கனிமொழி வலியுறுத்தி வருகிறாராம். 

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மகளிர் அணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என மகளிர் அணி செயலாளர் கனிமொழி கொடி தூக்கி உள்ளதால் கழக்கத்தில் உள்ளனர் நிர்வாகிகள். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உள்ளாட்சிகளில் மகளிருக்கு 50 சதவீதம் கொடுக்க வேண்டும் என சட்டமே இருக்கிறது. ஆனால், பெரும்பாலான மகளிர் இடங்களை தி.மு.க., பிரமுகர்களின் மனைவி, மகள் என குடும்ப உறுப்பினர்களுக்கே கொடுத்து விடுகிறார்கள். இந்த முறையும் அப்படி இருந்து விடக்கூடாது. தனது மகளிர் அணி நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்க வேண்டும் என மாவட்டச் செயலர்களிடம் கனிமொழி வலியுறுத்தி வருகிறாராம். இந்தத் தகவல் அப்படியே மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் பாஸ் செய்யப்பட டென்ஷனாகி விட்டார்களாம் இருவரும். 

அதேவேளை மற்றொரு புறம் சபரீசன் விவகாரமும் கிளம்பி இருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மூலமாக ஓ.எம்.ஜி சுனில் கடந்த இரண்டு தேர்தல்களில் திமுகவின் கொள்கைகளை, ஸ்டாலினின் பயணங்களை, பிரச்சாரங்களை ஒருங்கிணைத்து வந்தார். தற்போது சுனில் திமுகவை விட்டு விலகியதாகவும், பிரசாந்த் கிஷோரை திமுக தன் பக்கம் இழுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஓ.எம்.ஜி நிர்வாகி சுனிலும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் நகமும், சதையும் போல நட்புள்ளவர்கள். சுனில் போட்டுக் கொடுத்த திட்டப்படியே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது சுனிலை தூக்கி வைத்துக் கொண்டாடினார் ஸ்டாலின்.

அடுத்து வந்த வேலூர் மக்களவை தேர்தலையும் சுனிலின் ஸ்கெட்ச் படியே திமுக சந்தித்தது. ஆனால், குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி கிடைத்தது. இதற்கு காரணமாக துரைமுருகனும், அவர் மகன் கதிர் ஆனந்தும் தொகுதியில் பெரிய அளவில் நல்ல பெயரை சம்பாதிக்கவில்லை' எனக் கூறியிருக்கிறார் சுனில். 

அடுத்து வந்த இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக தோல்வியை தழுவியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் , பெரிதும் நம்பிய சுனில் மீது நம்பிக்கையின்மை ஸ்டாலினுக்கு ஏற்படுத்தியது. முன்னதாக உதயநிதியை கட்சிக்குள் கொண்டு வந்த ஸ்டாலின், அவருக்கு இளைஞரணியின் தலைமை பதவியை கொடுக்க முடிவெடுத்தார். ஆனால், சுனில் அதனைத் தடுக்கப் பார்த்துள்ளார். 

'உதயநிதி கட்சியில் இருக்கட்டும். நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு போகட்டும். இப்போது அவருக்கு கட்சியில் முக்கியப்பதவி கொடுத்தால் அதிருப்தி ஏற்படும் என எச்சரித்துள்ளார் சுனில். இந்த விஷயம் ஸ்டாலினின் குடும்பத்தினரையும் எட்டியுள்ளது. 'உதயநிதி கட்சிக்குள் வந்து, பதவியில் அமர வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்த குடும்பமோ, சுனில் வார்த்தைகளை கேட்டு கொதித்துப் போனது. அரைகுறை மனதில் இருந்த ஸ்டாலின் மனதை முழுதாய் மாற்றி உதயநிதி ஸ்டாலினை பதவியில் அமர்த்தினர். 

சுனில் உதய்க்கு முட்டுக்கட்டை போடுவதை அவரது குடும்பத்தினர் உணர்ந்து கொண்டுள்ளனர். இதற்கு பின்னணி என்ன என்பதையும் அறிய முற்பட்டுள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு ஆரம்பத்தில் இருந்தே துணை நின்று டெல்லி வரை தொடர்புகளை ஏற்படுத்தி வந்தவர் அவரது மருமகன் சபரீசன். அவருக்கு உதயநிதிக்கு பொறுப்புக் கொடுத்ததில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே சுனில் மூலம் உதநிதிக்கு எதிரான கருத்துக்களை சபரீசன் சொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதனை ஸ்மெல் செய்த ஸ்டாலின் குடும்பம் இனியும் சுனிலை தங்களை வைத்துக் கொண்டால் சரிப்பட்டு வராது என நினைத்து அவருடனான ஒப்பந்தந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆக குடும்பச் சண்டையால் வெளியேற்றப்பட்டிருக்கிறார் சுனில் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.