தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஜூன் 7ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு உயரதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் 10 மாவட்டங்களில் தொற்று மிக அதிகளவில் உள்ளது. எனவே, தொற்று அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு ஒரு சில தளர்வுகள் அளிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் 142 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ளும் வகையில், அதற்கு தமிழக அரசு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அரியலூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், கரூர், தென்காசி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, மதுரை, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தளர்வுகளற்ற ஊரடங்கு தொடரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கத்தில் உச்சத்தில் இருந்து தற்போது தொற்று பாதிப்பு குறைவாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.