ஜெயா டிவியில் இரட்டை இலை சின்னம் அகற்றப்படுமா?
ஜெயலலிதாவின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது என்றும், இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என்றும் அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. இதையடுத்து சசிகலா அணியும் ஒபிஎஸ் அணியும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தனர். ஆனால் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
அப்போது, சசிகலா தரப்பில் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஒபிஎஸ் க்கு 12 எம்.எல்.ஏக்களே ஆதரவு தெரிவித்தனர். அதிமுகவின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரிடம் ஏழு கட்டங்களாக விசாரணையை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதாவது இரட்டை இலை சின்னமும், கட்சியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் எடப்பாடி-பன்னீர் தரப்பு படு உற்சாகத்தில் உள்ளனர்.
இரட்டை இலை சின்னம் கிடைத்திருப்பதன் மூலம் எடப்பாடி-பன்னீர் அணியினரே உண்மையான அதிமுக என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், அதிமுக கட்சி பத்திரிகையாக கருதப்பட்ட நமது எம்.ஜி.ஆர். நாளிதழும், ஜெயா டிவியும் தினகரன் அணி வசமே உள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி-பன்னீர் அணியினரே உண்மையான அதிமுக என நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இரட்டை இலை சின்னத்தை ஜெயா டிவி
பயன்படுத்தக் கூடாது என்று அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழும் இனி பயன்படுத்தக் கூடாது என்றும் அதனை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்த எந்த உரிமையும் கிடையாது என்று கூறிய அவர், இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என்றும் மதுசூதனன் கூறியுள்ளார்.