ஆசிரியர்களுக்குச் சம்பளம் குறைப்பா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்..!
ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதியாகக் குறைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா சற்று குறைய தொடங்கியதை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வந்தது. சிறிது நாட்களிலேயே மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து மறுபடியும் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஓராண்டாக வேலையின்றி உள்ள பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலைதளங்களில் கருத்துகள் வெளியாகின.
இந்நிலையில், மணப்பாறை அரசு மருத்துவமனை, அரியமலங்கலம் குப்பைக் கிடங்கு, சத்திரம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி ஆகியவற்றைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்;- பள்ளிக் கல்வி இயக்குநர் பணியிடத்தை ஆணையராக மாற்றியது தொடர்பாக, பல்வேறு தரப்பில் இருந்தும் வரப்பெற்ற கருத்துகளை முதல்வர் பரிசீலித்து உரிய முடிவை அறிவிப்பார். கொரோனா தொற்று குறைந்த பிறகே, பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும்" என்றார்.
கொரோனா ஊரடங்கால் பணி இல்லாமல் வீட்டில் இருக்கும் ஆசிரியர்களின் ஊதியத்தைப் பாதியாகக் குறைத்து, முன்களப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று எனக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் வாட்ஸ்அப் மூலம் அறிவுறுத்தல்கள் வருகின்றன. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டு, அவருடைய அறிவுரையின்படி, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.