எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போறேன் !! கருணாஸ் அதிரடி அறிவிப்பு…
தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும், தான் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தால் மக்கள் விரோத அரசுக்கு உதவி செய்தது போல் ஆகிவிடும் என முக்குலதோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை செய்தியாளர்களிடம் பேசிய அவர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் மேல் முறையீடு செய்தால், அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிப்போடும் என தெரிவித்தார். . இதன்மூலம் மக்களுக்கு விரோதமான அரசை தொடர்ந்து நடத்துவதற்கு நாம் உதவி செய்தது போல் ஆகிவிடும். எனவே நாம் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திப்போம் என தினகரன் கூறியதை நான் வரவேற்கிறேன் என கருணாஸ் கூறினார்.
எனக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான் இந்த வாய்ப்பை கொடுத்தார். நான் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஜெயலலிதாவின் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்ற உணர்வோடு இருந்தவன் நான்.
என் சமுதாயத்திற்காகவும், என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும் செய்யாத இந்த அரசில், எம்.எல்.ஏ.வாக தொடர நான் விரும்பவில்லை. எப்போது வேண்டுமானாலும் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். நான் சம்பளத்திற்காக எம்.எல்.ஏ. பதவிக்கு வரவில்லை.
நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். சபாநாயகரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்தவொரு கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். தற்போதைய தமிழக அரசு மக்களுக்கான அரசாக இல்லை. சுயநலமான அரசாகவும், ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளவர்களின் உறவினர்களுக்கு சலுகை செய்யும் அரசாகவும் உள்ளது என கருணாஸ் கடுமையாக பேசினார்..