எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லுமா? நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடத்தப்படும்? நீதிமன்றத்தின் பதிலைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வு..!
முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திரும்பப் பெற்றதை அடுத்து, முதல்வர் பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால் ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால், முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கும் சேர்த்து விசாரணைக்கு வந்தது. அப்போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்துவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பிருப்பதாக ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, இன்று வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். தங்களின் தகுதிநீக்கம் செல்லாது என உத்தரவிடக்கோரி எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கும் ஸ்டாலின் வழக்குடன் சேர்த்து இன்று விசாரிக்கப்படுகிறது.
இன்றைய விசாரணையில் நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்தே தமிழக அரசியலின் அடுத்தகட்ட நகர்வு இருக்கப்போகிறது. முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமா? 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்படுமா? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு நீதிமன்றம் இன்று பதிலளிக்க உள்ளது.
இன்றைய நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகே தமிழக அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது தெரியும் என்பதால் நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது? என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.