திருமாவளவனைக் கண்டித்து குஷ்பு நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு தடை... தடையை மீற பாஜக திட்டம்..!
சிதம்பரத்தில் திருமாவளவனைக் கண்டித்து நடிகை குஷ்பு பங்கேற்க உள்ள ஆர்ப்பாட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பாஜக தெரிவித்துள்ளது.
மனுதர்மத்தில் பெண்களை பற்றி இழிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் இந்து பெண்களை திருமாவளவன் இழிவாக பேசிவிட்டதாக கடும் எதிர்ப்புகள் தெரிவித்துவருகின்றன. பாஜக தலைவர்கள் திருமாவளவனுக்கு எதிராகக் கொந்தளித்துவருகிறார்கள். இந்த விவகாரத்தில் திருமாவளாவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தில் திருமாவளவனைக் கண்டித்து இன்று போராட்டம் நடக்க உள்ளது. திருமாவளவன் எம்.பி.யாக இருக்கும் சிதம்பரம் தொகுதியிலும் பாஜக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிதம்பரம் காவல் துறை தடை விதித்தது. திருமாவளவன் எம்.பி-யாக உள்ள சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் என்பதால் போலீஸார் இந்த முடிவை எடுத்தனர்.
இதனையடுத்து சிதம்பரம் பகுதிக்குள் பாஜக தொண்டர்கள் செல்ல முடியாத வகையில், கடலுார் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. சிதம்பரத்தில் போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து, நடிகை குஷ்பு இன்று காலை சிதம்பரத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அவரை, போலீசார் வழியில் தடுத்து நிறுத்த திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், ‘போலீசார் தடை விதித்தாலும், சிதம்பரம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என்று பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.