தமிழக நிதி நிலை அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
திருமண உதவி திட்டம்
தமிழகத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் மாணவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, இதில் அதிமுக சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தாலிக்கு தங்கம் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்ததாக தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்

தாலிக்கு தங்கம் திட்டத்தில் முறைகேடு
இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார், அதில் 1989ம் ஆண்டு இத்திட்டத்திற்கு முதல் முதலாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், 2011ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் இந்த திட்டத்தை இடையில் நிறுத்திய அதிமுக அரசு பின்னர் மீண்டும் செயல்படுத்தியதாக கூறினார். அதிமுக அரசு திருமண உதவியை 50 ஆயிரம் ரூபாயும் 8 கிராம் தங்கம் என உயர்த்தி வழங்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் 24.5% மட்டுமே தகுதியான பயனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். CAG தணிக்கை அறிக்கையின் மூலம் இத்திட்டத்தில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளதாக கூறினார். முறைகேடு செய்தவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை 43 வழக்குகள் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்வி உதவி தொகை திட்டத்தை ஆதரிக்க வேண்டும்
தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46% மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்கு தங்கம் திட்டம் , பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம் எனவும் தெரிவித்தார். திருமண உதவி திட்டத்தின் கீழ் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்ததாக தெரிவித்தவர், ஆனால் உயர்கல்வி உறுதி திட்டத்தின் மூலம் 6 லட்சம் பேர் பயனடைய உள்ளதாக தெரிவித்தார். திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து உரிமை பெண்களுக்கு வேண்டும் என்பதால் பெண்ணுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் இத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளதாக கூறினார். சமூக நீதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் கட்சி பாகுபாடின்றி இத்திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

தாலிக்கு தங்கம்- தொடர வேண்டும்
இதனை தொடர்ந்து பேசிய எதிர்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி,ஏற்கனவே தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணபித்து காத்திருக்கக்கூடியவர்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு, இத்திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதால் தான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
