அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? எடப்பாடிக்கு புகழேந்தி கேள்வி
நீட் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர், அமைச்சர்கள் செல்லாதது ஏன் என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி கேட்டுள்ளார்.
நீட் தேர்வு கொடுமையால் தகுதியிருந்தும் மருத்துவம் படிக்க முடியாமல் போனதால் விரக்தி அடைந்த மாணவி அனிதா நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழகத்தையே உலுக்கியது.
அவரின் தற்கொலைக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இன்றும் அது தொடர்பான போராட்டங்கள் சென்னையில் நடத்தப்பட்டன.
தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்துக்கு அரசின் நிதி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா, அரசின் நிதியுடன் அனிதாவின் வீட்டுக்கு சென்றார். ஆனால், அனிதாவின் குடும்பத்தாரோ, நிதியை வாங்க மறுத்து விட்டனர். நீட் தேர்வில் நல்ல முடிவை ஏற்பட்ட பிறகு நிதியுதவி பெற்றுக் கொள்கிறோம்
என்று திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் அதிமுக செயலாளரும், டி.டி.வி. தினகரனின் ஆதரவாளருமான புகழேந்தி திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர், அமைச்சர்கள் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் கவிழும் என்றும், சிறையில் சசிகலாவை டிடிவி தினகரன் நாளை சந்தித்தபிறகு நல்ல முடிவை எடுப்பார் என்றும் புகழேந்தி கூறினார்.