AIADMK: மோடிக்கு எதிரான திமுகவின் கருப்புக் கொடி வெள்ளைக் கொடியானது ஏன்? ஸ்டாலினை விளாசும் அதிமுக..!
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். இப்போது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. நண்பர்தான். ஆகவே, கருப்பு கொடி காட்டத் தேவை இல்லை என சொல்லி இருக்கிறார். இந்த நேரத்திலேயே தமிழக மக்களும், இன்றை தலைமுறையில் இருக்கின்ற இளைஞர்களும், இளம்பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
பிரதமர் மோடியின் தமிழகம் வருகையில் திமுகவின் 2 முகங்கள் வெளிப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி உள்ளன என அதிமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
கடந்த முறை தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு சென்னையில் மொத்தம் 29 இடங்களில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பாக கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அதேபோல்,Go Back Modi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. நாட்டின் பிரதமர் என்றும் பாராமல் திமுக அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறது என்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு " கெஸ்ட் " எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மாநில பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வெளியிட்டுள்ள வீடியோவில்;- பிரதமர் மோடியின் தமிழகம் வருகையில் திமுகவின் 2 முகங்கள் வெளிப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒன்று, ஆளுங்கட்சியான பிறகு வேறொன்று என திமுக போடும் இரட்டை வேடங்கள் அம்பலமாகி உள்ளன.கடந்த 2018-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பிரதமர் மோடி ராணுவ தளவாட கண்காட்சி மற்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் வைரவிழா நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது, Goback Modi என ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். காரணம் கேட்டபோது தமிழர் நலனுக்காக பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை. அந்த நலனை கறுப்புக் கொடி போராட்டத்தின் மூலம் மீட்டுக் கொடுக்கப் போவதாக பொய்ப் பிரசாரம் செய்து மோடிக்கு எதிரான அரசியலை முன்னெடுப்பதாக பொதுமக்களை, சிறுபான்மை மக்களை ஏமாற்றி இன்று ஓட்டு வாங்கி ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். இப்போது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. நண்பர்தான். ஆகவே, கருப்பு கொடி காட்டத் தேவை இல்லை என சொல்லி இருக்கிறார். இந்த நேரத்திலேயே தமிழக மக்களும், இன்றை தலைமுறையில் இருக்கின்ற இளைஞர்களும், இளம்பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். திமுக கறுப்புக்கொடி காட்ட வேண்டிய தேவையில்லை என்று சொன்னால் இந்த 6 மாத காலத்திற்குள்ளாக தமிழர் நலன் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்றிவிட்டார் என்று அர்த்தமா?
அல்லது இந்த கருப்புக்கொடி Goback Modi அத்தனையுமம் அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டு மக்களையும், அப்பாவி சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த அப்பாவி சகோதரர்களை ஏமாற்றுவதற்கு கையில் எடுத்த அரசியல் ஆயுதமா? என்பதை விளக்க வேண்டும். திமுகவின் 6 மாத கால ஆட்சி நிறைவடைந்திருக்கிறது. திமுக கொள்ளை புறமாக ஆட்சியை பிடித்திருக்கிறது. பிரசாத் கிஷோர் மூலமாக வெறும் யூகங்களை மட்டும் வைத்து மக்களுடைய அன்பை சம்பாதிக்க முடியாமல் ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆகவே, நீங்கள் இன்று மோடி நண்பர் என்று சொன்னால் இந்த 6 மாத காலத்திற்குள் நீங்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகள் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நீட்டுக்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றிருக்கக்கூடிய தீர்மானத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதா? இன்றைக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தமிழகத்துக்கு வழங்கப்பட்டதா?
ஊரக உள்ளாட்சித் துறைக்கு வரவேண்டிய நிதி வந்துவிட்டதா? 7 பேர் விடுதலை விவகாரத்தில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, 7 தமிழரை விடுதலை செய்துவிட்டீர்களா? இவற்றையெல்லாம் நிறைவேற்றிய காரணத்தினாலே Go Back Modi என்ற ஹேஷ்டேக்கை கைவிட்டு நண்பராக ஏற்று இன்று வரவேற்கிறீர்களா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். சுட்டுக் கொல்லப்படும் மீனவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நீங்கள் எழுதிய கடிதத்துக்கு பதில் கிடைத்துவிட்டதா? ஏழை எளிய மக்களுக்கு கட்டித்தரக் கூடிய வீடுகளுக்காக்க, மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வந்துவிட்டதா? கிராமப்புற ஏழை மக்கள் பயனடைந்து வரும் 100 நாள் வேலை திட்டத்துக்கான ரூ1,178 கோடி நிலுவைத் தொகையை வாங்கிவிட்டீர்களா? திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றிவிட்டதா? கொரோனா சிகிச்சைக்கு தர வேண்டிய உதவித்தொகை, புயல் வெள்ள பேரிடர் காலத்துக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்துவிட்டதா?
இப்படி எண்ணற்ற கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்திருக்கிறீர்கள். ஆனால் மத்திய அரசு பதில் தரவில்லை. ஆனால் அன்றைக்கு பறக்கவிட்ட கறுப்புக் கொடியை இன்று வெள்ளைக்கொடியாக்கி பறக்கவிட்டிருப்பதன் சூட்சமம்தான் என்ன? என்பது தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இன்றைக்கு தமிழக மக்களுக்கு அரசியல் பார்வையாளர்களுக்கும் இருக்கிறது என்பதை இந்த நேரத்திலேயே தெரிந்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். அதேபோல், எய்ம்ஸ் ஒரே செங்கலை மட்டும் காண்பித்து உதயநிதி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஏமாற்றி வாக்கு வாங்கினார். இன்றைக்கு 6 மாதம் ஆகிவிட்டதே ஒரு செங்கல்லை தவிர்த்து இன்னொரு செங்கல்லை கூட நீங்கள் இதுவரை வாங்கவில்லையே என்ற செய்தியை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். நீங்கள் அறிவீர்களா என டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கேள்வி எழுப்பியுள்ளார்.