" திருமாவளவன் ஏன் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அஃபர் சொன்னார்.? கலவரம் நடத்த சதி".. பகீர் கிளப்பிய எச்.ராஜா.
திருமாவளவனின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர்கள் திருமாவளவனை விமர்சித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் திருமாவளவன் பேச்சுக்கு நடுநிலையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது
.
திருமாவளவன் ஏன் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என முழங்கினார் என கேள்வி எழுப்பியுள்ளார் எச்.ராஜா, 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீயசக்திகள் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவியை பின் தொடர்ந்து சென்று இந்துத்துவ மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பிய விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய திருமாவளவன், ஜெய் ஸ்ரீராம் என்பது ஹிந்துத்துவா என்றும், ஜெய்பீம் அல்லாஹு அக்பர் என்பது புரட்சி மொழி என்றும் கூறிய நிலையில் எச். ராஜா இவ்வாறு விமர்சித்து உள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து உள்ளது என்ற பொதுவான விமர்சனம் இருந்து வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து தாக்குதல் அதிகம் நடக்கிறது என்றும், சிஐஏ, இந்திய குடியுரிமை சட்டம், வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் இஸ்லாமியர் மீது தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களும், இந்துக்களே இஸ்லாமியர்களை கொள்ளுவோம் திரண்டு வாருங்கள் என்று வெளிப்படையாக இந்துத்துவ தலைவர் பேசும் அளவிற்கு நாட்டில் வெறுப்பு பிரச்சாரம் அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்களின் ஆதங்கமாக உள்ளது. இந்நிலையில்தான் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் வலுத்துள்ளது. அந்த வகையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் தாங்களும் காவி துண்டு அணிந்து வருவோம் என இந்துத்துவா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் புயூசி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த ஒரு மாணவியை இந்துத்துவ மாணவர்கள் பின் தொடர்ந்து சென்று ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் என முழங்கியதும், அப்போது அவர்கள் எதிர்த்து நின்று அந்த மாணவியை அல்லாஹு அக்பர் என உறக்க முழங்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதற்கான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றமடைய வைத்துள்ளது. இதேபோல பள்ளி நிர்வாகங்கள் முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் மீறி வந்தால் தனியறையில் அமர்ந்து படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தது பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. கல்லூரி மாணவர்களிடம் மத உணர்வைத் தூண்டும் வகையில் இந்த பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசிய திருமாவளவன், இஸ்லாமிய பெண்கள் அரசியலமைப்பு சட்டம் தருகிற உரிமையின் அடிப்படையில் ஆடை சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
அதை தடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை, ஹிஜாப் அணியக்கூடாது என தடுப்பது நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி, இந்தியர்களை இந்துக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பிரிக்கும் முயற்சியை இங்கு நடக்கிறது, இந்து மதத்தில் மேல்சாதி, கீழ்சாதி என்று பிரிக்கிறார்கள், பிரித்தாளும் சூழ்ச்சியே சங்பரிவாரின் சூழ்ச்சியாக உள்ளது. சமூகநீதி துறையை பிரித்து ஓபிசி சமூகத்தினரின் நலன்களை பாதுகாக்க தனியே அமைச்சரவை ஒன்றை உருவாக்க வேண்டும். ஜெய்ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தின் மூலம் இந்த நாட்டை பிளவுபடுத்தலாம் என முயற்சிக்கும் சக்திகளுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஸ்ரீ ராம் என்பதன் எதிர்க்குரல் இந்தியாவில் ஜெய்பீம் என்பதும், அல்லாஹு அக்பர் என்பதும்தான் இன்று மாற்றுக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த அவையில் நான் ஜெய்பீம் அல்லாஹு அக்பர் என முழங்குகிறேன் என பேசினார்.
திருமாவளவனின் இந்த பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில் பாஜக தலைவர்கள் திருமாவளவனை விமர்சித்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் திருமாவளவன் பேச்சுக்கு நடுநிலையாளர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. திருமாவளவன் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என பேசியது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எச்.ராஜா, 130 கோடி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்களின் உயிரையும் காத்து, உணவையும் கொடுக்கும் நல்ல பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொது மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் மலிந்து தலைவிரித்தாடுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தீய சக்திகள் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள்.
இந்நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் ஏன் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் அல்லாஹு அக்பர் என குரல் எழுப்ப வேண்டும்? அதில் சந்தேகம் உள்ளது என்ற அவர், பொருளாதார ரீதியில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே பள்ளிக்கூடங்களில் சீருடை பின்பற்றப்படுகிறது. பள்ளிகூடத்தில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்ற முடியாதவர்கள் மதர்ஸாவிற்கு செல்ல வேண்டியதுதானே என விமர்சித்தார்.