நாங்கள் என்ன திமுகவா...? - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி பேட்டி...
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு எங்களை ஏன் கூப்பிடவில்லை எனவும் நாங்கள் என்ன திமுகவா எனவும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் தங்கியுள்ளனர்.
இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏஎக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதைதொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பிக்கள்., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு எங்களை ஏன் கூப்பிடவில்லை எனவும் நாங்கள் என்ன திமுகவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் டிடிவி தினகரனுக்கு பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவார்கள் எனவும், ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்காவிட்டால் குடியரசு தலைவரை சந்தித்து முறையிடுவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும் டெல்லி செல்லும்போது பெரும்பாலும் 50 எம்.எல்.ஏக்களாவது எங்களுடன் வருவார் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.