உண்மையில் மக்கள் சேவை கட்சி யாருடையது..? பொதுச்செயலாளர் இவரா..?
இவருக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளன. எர்ணாவூரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டின் முகவரியில்தான் கட்சியை பதிவு செய்துள்ளார்.
ரஜினி ஆரம்பித்துள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய மக்கள் சேவை கட்சி யாருடையது என்கிற தகவல் வெளிவந்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியின் பெயர் பதிவாகியுள்ளது. இந்த கட்சிக்கு பாபா முத்திரையை சின்னமாக கேட்டதாகவும் ஆனால், ஆட்டோ சின்னமாக வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்சி, ரஜினியின் அரசியல் கட்சி என நேற்று ஊடகங்களில் தகவல் பரவியது. ரஜினி தரப்பில்தான் இந்த பெயர் பதிவானதாக பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அதனை மறுத்து ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை விடுத்தது. அதில், ’’இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி, அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைமையிலிருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை ரஜினி மக்கள் மன்றத்தினர் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்’’என தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரித்தபோது, மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தவர் ஏ.கே.ஆண்டனி ராஜா. இவர், ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி எனவும் கூறப்படுகிறது. இவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டுள்ளார். சென்னை துறைமுகத்தில் கான்ட்ராக்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பல வீடுகள் உள்ளன. எர்ணாவூரிலும் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டின் முகவரியில்தான் கட்சியை பதிவு செய்துள்ளார்.