கொங்கு மண்டலம் யாருடைய கோட்டை..? கோவையில் காக்கிகளுக்குள் நடக்கும் பெட்டிங் கேம்..!
மு.க.ஸ்டாலினை சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சுதாகருக்கா மேற்கு மண்டல ஐ.ஜி. பதவி என தி.மு.க. உடன்பிறப்புகள் மெர்சலாகிறார்கள்.
காவல்துறயில் அதிகாரமிக்கவர் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதமா..? ஐ.ஜி., சுதாகரா என்கிற பட்டிமன்றமே நடந்து வருகிறது. ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தான் அதிகாரமிக்கவர். அதுவும் தமிழ்நாட்டின் காவல்துறையையே வழி நடத்துகிற உளவுத்துறையின் தலைவர் பொறுப்பை ஏற்று இருக்கும் டேவிட்சன், எப்படி மேற்கு மண்டல (கோவை) ஐ.ஜி. சுதாகரை விட அதிகாரம் குறைவானவராக இருக்க முடியும்? என்கிற சந்தேகம் இல்லாமல் இருக்காது. ஆனால், காவல்துறையில் அப்படி ஒரு பெட்டிங் கேம் நடந்து வருவதே உண்மை.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் காவல்துறையில் ஐ.ஜி., சுதாகர் நல்ல பதவிகளையே அலங்கரித்து வந்தார். அதுவும் சென்னையிலே அமர்ந்து கொண்டு ‘இரவில் சுற்றும் ஆந்தை’போல தனது டீமுடன் ராஜபவனியில் வலம் வந்தவர். அப்படிப்பட்ட சுதாகர், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார். இப்போதைய முதல்வராகவும், அப்போதையா எதிர்கட்சி தலைவராகவும் இருந்த மு.க.ஸ்டாலினை சட்டசபையில் இருந்து குண்டுக்கட்டாக தூக்கி வெளியே வீசிய சுதாகருக்கா மேற்கு மண்டல ஐ.ஜி. பதவி என தி.மு.க. உடன்பிறப்புகள் மெர்சலாகிறார்கள்.
ஆனால், காவல் துறையின் மேற்கு மண்டலத்தில் பெட்டிங்கே வேறு ரகம். இதுகுறித்து விசாரித்தால், ‘’கோவை மண்டல ஐ.ஜி.,யாக சுதாகர் வந்தது கூட ஏதோ பரவாயில்லை. மேற்கு மண்டலத்தில் இருக்கும் மாவட்ட எஸ்.பி.க்கள் அனைவருமே, சுதாகரின் சாய்ஸ்தான். திருப்பூர் எஸ்.பி., -ஷெஷாங் சாய். சசிமோகன் - ஈரோடு, கோவை-செல்வ நாகரத்தினம், சேலம்- ஸ்ரீ அபிநவ், கிருஷ்ணகிரி- சாய் சரண் தேஜஸ்வி- தர்மபுரி-கலைச்செல்வன் என இந்த ஆறு பேருமே சென்னையில் சுதாகர் இணை கமிஷனராக பணியாற்றிய இடங்களில் இவருக்கு கீழே பணியாற்றியவர்கள்தான்.
எனவே, சுதாகரின் சாய்ஸ்படி தான் 6 மாவட்ட எஸ்.பி.களும் நியமிக்கப்பட்டார்கள் என்கிறார்கள் ஒரு தரப்பினர். இல்லை, இல்லை... டேவிட்சனின் சாய்ஸ்தான் என்று இன்னொரு தரப்பு அழுத்தமாக சொல்கிறார்கள்.