Who Is Permission? Tinakaranukka? Etappatikka?
மறைந்த ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி வரும் 5 ஆம் தேதி அன்று சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி ஊர்வலம் நடத்த எடப்பாடி-பன்னீர் அணியும், டிடிவி தினகரன் அணியும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடல் நலக் குறைவு காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் நிறைவடைவதையொட்டி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அணியும், டி.டி.வி. தினகரன் அணியும் மவுன ஊர்வலம் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 5 ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் இருந்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை மவுன ஊர்வலம் செல்ல உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர்வலம், ஜெயலலிதா நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தி உறுதி மொழி ஏற்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மவுன ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு டிடிவி தினகரன் ஆதரவாளர் வி.பி. கலைராஜன், சென்னை மாநகர ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., ஒருங்கிணைந்த அணி சார்பில், ஜெயலலிதா மறைந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி - பன்னீர் அடிண சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை, அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து காலை 9.30 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற உள்ளதாக அதில் கூறப்ட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து
கொள்ளும் இந்த பேரணியில் தொண்டர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன், ஒருங்கிணைந்த எடப்பாடி-பன்னீர் அணிகள் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மவுன ஊர்வலம் அறிவித்துள்ளனர். இவ்விரு அணியினரும் தங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே இந்த மவுன ஊர்வலத்தை திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

இவ்விரு அணியினரும் மவுன ஊர்வலத்துக்கு காவல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளது. ஊர்வலத்துக்கு, ஒரு அணியினருக்கு அனுமதி வழங்கப்படலாம் என்றும் அதாவது முதலமைச்சர்-துணை முதலமைச்சர் அணிக்கே அனுமதி வழங்கப்படலாம் என்றும் தினகரன் அணியினருக்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. தினகரன் அணியினருக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் நீதிமன்றத்தை
அணுகி அனுமதி வாங்கியும் பேரணி நடத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிக்க இவ்விரு அணிகளும் காவல் துறையிடம் அனுமதி கேட்ட நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
