சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு..? சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் ரஜினி..!
சென்னையில் வரும் 26-ஆம் தேதியன்று தனியார் ஹோட்டலில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சித் தொடங்கி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி, டிசம்பர் மாதத்தில் உடல்நலக்குறைவை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என அதிரடியாக அறிவித்தார். தான் எற்கனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக தன்னுடைய ரசிகர்களிடம் ரஜினி மன்னிப்பும் கோரினார். ஆனால், இதை ஏற்காத ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர், ரஜினி அரசியலில் ஈடுபடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தி தன்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று கூறி அரசியலுக்கு முழு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி.
இந்நிலையில் ரஜினியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். ரஜினியிடம் அரசியல் பேசவில்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தாலும், இணைந்து பயணிப்போம் என்று கமல் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே வரும் 26ம் தேதி அன்று ரஜினி ரசிகர்களை சந்திப்பார், அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் தகவல்கள் சிறகடித்தன. இந்நிலையில் தற்போது சென்னை தனியார் ஹோட்டலில் ரஜினி பிப்ரவரி 26 அன்று ரஜினி சந்திக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ரஜினி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், மீண்டும் அவரைப் பற்றிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யாருக்காவது ஆதரவு அளிக்கும் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.