திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட கருணாநிதி வெற்றி பெற்ற சேப்பாக்கம், சைதாப்பேட்டை, துறைமுகம், அண்ணாநகர் ஆகிய தொகுதிகள் ஆராயப்பட்டு வருகின்றன.
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கட்சி மேலிடம் உதயநிதிக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டது. தொடக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியிலும் உதயநிதி ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிட முடிவு செய்துவிட்டார். எனவே, திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் சென்னையிலேயே போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணாநிதி மூன்று முறை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைத்தான் உதயநிதி முதல் சாய்ஸாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. குஷ்பு போட்டியிடும்பட்சத்தில் அதிக நாட்கள் சேப்பாக்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்று திமுக மேலிடம் கருதுகிறது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் உதயநிதி பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால், அதற்கேற்ப தொகுதியைத் தேர்வு செய்யும் பணியை திமுக மேலிடமும் ஐ-பேக் டீமும் தொடங்கியிருப்பதாக திமுகவில் கூறப்படுகிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை தவிர்க்கும்பட்சத்தில் ஸ்டாலின் 4 முறை வெற்றி பெற்ற ஆயிரம் விளக்கு, கருணாநிதி 2 முறை வெற்றி பெற்ற துறைமுகம், சைதாப்பேட்டை, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளும் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட ஆராயப்பட்டுவருகிறது.
