டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே ? கமல் பாணியில் கமலுக்கு கவுண்ட்டர் கொடுத்த தமிழிசை !!!
சுப்ரமணியபுரம் திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை , தன்துறை சார்ந்த துக்கம் தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே? என நடிகர் கமலஹாசனுக்கு அவர் பாணியிலேயே கவுண்ட்டர் கொடுத்துள்ளார்.
நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், இணை தயாரிப்பானருமான அசோக்குமார், கந்துவட்டி கொடுமை காரணமாக நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் திரையுலகினரை மட்டுமல்ல பொது மக்களையும் அதிரச் செய்தது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் மீது இபிகோ 306 வது பிரிவின்படி வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தது தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால் , கந்துவட்டி கொடுமையை அறவே ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சினிமா துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் அசோக்குமாரின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கும்போது ரஜினியும் கமலும் இன்னும் எந்தக்கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தனது ட்விட்டரில் தன்துறை சார்ந்த துக்கம் தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான்வேண்டும்! என என நடிகர் கமல் பாணியில் புரியாமல், அவரையே கலாய்த்து பதிவிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கமல் டுவிட்டர் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த தமிழிசை, அவரின் டுவிட்டர் பதிவுகளை புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை வேண்டும் என கலாய்த்து விட்டு தற்போது அவரும் அதே பாணியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.