காஸ் மானியம், நகைக்கடன் தள்ளுபடியெல்லாம் எங்கெங்க..? ஆளுநர் உரையில் அப்செட்டான விஜயகாந்த்..!
காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்பட திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு அமைந்த பிறகு முதல் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றினார். இந்த உரையில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆளுநர் உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் உரை குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பெட்ரோல் ரூ.5 & டீசல் ரூ.4 குறைப்பு, மதுவிலக்கு, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி, வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி, காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் உள்ளிட்ட, திமுக தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது” என்று விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.