காக்க வைக்கும் திமுக..! உஷாரான மக்கள் நீதி மய்யம்..! கூட்டணி அறிவிப்பு எப்போது?
திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கமல், மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.
திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே நடைபெற்ற திரைமறைவு பேச்சுவார்த்தையில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான பிறகே கமல், மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.
தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியவர் கமல். கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடுகையில் தற்போதைய கமல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிக எளிதாக ரீச் ஆனது. மேலும் மாநகரங்களில் கமலை காண அவரே எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம் கூடியது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கமல் பயன்படுத்திய சொற்கள் அவரதுபிரச்சார வீச்சை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றது. ஊடகங்களும் கமல் பிரச்சாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால் திடீரென காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக கூறிவிட்டு கமல் தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் பிரச்சாரம் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அடுத்த கட்ட பிரச்சாரம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாமல் இருக்கின்றன. இதற்கு காரணம் திமுகவுடன் கமல் டீலை முடித்தது தான் என்று அப்போது தகவல்கள் வெளியாகின. ஆனால் கூட்டணி உறுதி என்று டீலை ஓகே செய்த பிறகு தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச திமுக தரப்பில் இருந்து கமலுக்கு எந்த தகவலும் தற்போது வரை வந்து சேரவில்லை என்கிறார்கள். அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு கமல் செல்வதற்கு முன்னர் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று கருதுகிறார்.
ஆனால் திமுகவோ முதலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிப்பேச்சை முடிவு செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். தற்போது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்க முதலில் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு பிறகு கமல் கட்சி பக்கம் வரலாம் என்று திமுக கருதுகிறது. ஆனால் கமலோ, தான் பிரச்சாரத்திற்க செல்ல வேண்டும் என்பதால் விரைவில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தி வருவதாக கூறுகிறார்கள். ஆனால் திமுக கமலை தொடர்ந்து காக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். அவசரம் வேண்டாம் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டாலும் கமல் உஷாராகிவிட்டதாக கூறுகிறார்கள்.
எனவே கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல் கமல் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை திமுகவிற்கு எதிராக கமலின் வார்த்தை வீச்சு அதிகம் இருக்கும் என்கிறார்கள். இதன் மூலம் திமுக தரப்புக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று கமல் தரப்பு கருதுகிறதாம். எனவே அதற்கு ஏற்ற வகையில் கமலின் பிரச்சார திட்டம் தயாராகி வருகிறதாம். இதனிடையே கமலை 3வது அணி குறித்து விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அணுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் கமல் அதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
அதே சமயம் தற்போது அந்த கட்சிகளை கமல் தரப்பே தொடர்பு கொண்டு பேசி வருவதாக கூறுகிறார்கள். 3வது அணி என்று கமல் தரப்பு போக்கு காட்டினால் திமுக தங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஓடி வரும் என்றும் கமல் கருதுவதாக சொல்கிறார்கள்.