தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகள் எப்போது மூடப்படும்....?” - உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி
தற்போது செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகள் எப்போது மூடப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயலில் கடந்த சில நாட்களுக்கு முன் டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கைதான பிரசன்னா என்பவரது தாயார் மரணத்திற்கு அவரை பரோலில் செல்ல நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் அறிவுறுத்தியது. ஆனால் அவரை சிறை துறை விடுவிக்க மறுத்து விட்டது. இதனால் நீதிபதிகள் கோபமுற்றனர்.
இந்த மனு கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், புழல் சிறைத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சிறை துறை அதிகாரிகள், நீதிபதிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டனர்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
சிறை துறையில் தகவல் தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் படிப்படியாக டாஸ்மாக் மூடப்படும் என அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதனை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை. தமிழகத்தில் செயல்படும் மீதமுள்ள டாஸ்மாக் கடைகள் எப்போது அடைக்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், இந்த வழக்கை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், அன்றை விசாரணையின்போது, உரிய பதல் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.